செங்கல்பட்டு: செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் பெரிய நத்தம் புறவழி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு பாலாற்று கரையையொட்டி செங்கை ஸ்ரீ ஐயப்ப சேவா அறக்கட்டளை சார்பில் செங்கை ஸ்ரீ ஐயப்பன் கோயில் காஞ்சிபுரம் சாலை பெரிய நத்தம் புறவழிச்சாலையில் உள்ளது .
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் முடிவெடுத்து கோயில் திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் திருப்பணிகள் நிறைவடைந்தது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாள்கள் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மஹா கணபதி உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் 1008 கலச அபிஷேகப் பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கலசப் புறப்பாடு நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 9 - 10:30 மணியளவில் நடைபெற்றது.
புனித நீரை விமான கலசத்தில் ஊற்றும்போது பக்தர்கள் கும்பாபிஷேக புனித நீரை ஊற்றுவதை பார்ப்பதைவிட வானத்தில் வட்டமிட்ட கருடர்களை பார்த்து தரிசனம் செய்தனர்.
ஐயப்பன் கும்பாபிஷேகத்தை அடுத்து குருவாயூரப்பன், விநாயகர், முருகர், துர்கை அம்மன் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கை ஸ்ரீ ஐயப்ப சேவா அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.