சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடரின் நாயகி ஷபானாவுக்கு பதிலாக அத்தொடரில் வானத்தைப் போல தொடரின் நடிகை நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகை ஷபானா அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனால், அவரின் ரசிகர்கள் மிகுந்த சோகமடைந்தனர். அதற்கான காரணம் குறித்து பல்வேறுவிதமான வதந்திகள் வெளியாகின. அதற்கு நடிகை ஷபானா மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி நடிக்கவுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வானத்தைப் போல தொடரிலிருந்து நடிகை தேப்ஜானி விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதன்மூலம் மிஸ்டர் மனைவி தொடரில் நாயகியாக நடிப்பதற்காக அவர், வானத்தைப்போல தொடரிலிருந்து விலகியுள்ளது தெளிவாகிறது.
ராஜீப் சட்டர்ஜி இயக்கி 2013-ல் வெளியான நாக் அவுட் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக தேப்ஜானி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வங்கமொழித் தொடரான அபோன்ஜோன் மூலம் டிவியில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் வானத்தை போல தொடரில் சந்தியா வேடத்தில் நடித்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.