
காவிரி கடைமடையான நாகை மாவட்டம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் விதை நெல்கள் தூவியும், கும்மியடித்தும் உற்சாகமாக விவசாயிகள் வரவேற்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 28ஆம் தேதி டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 31-ம் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி வே. தனபாலன் தலைமையில் தடுப்பணைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் மற்றும் விதை நெல் தூவியும் பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர். தொடர்ந்து சட்ரஸ்-க்கு தீபாரதனை எடுத்தும், சூரிய பகவானை வழிபட்டு விவசாயம் செழிக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து
காவிரி நீர் வந்ததை வரவேற்கும் பொருட்டு பெண்கள் கும்மி பாட்டுப்பாடி வரவேற்றனர்.
இந்த பாண்டவையாற்றின் மூலம் இறையான்குடி, வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவினாயகன் கோட்டம்,களத்திடல்கரை , மகிழி உள்ளிட்ட விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை தலைவர் கே. பக்கிரிசாமி, மாநில அமைப்பாளர் ஆர்.வேதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வீ.ராமசாமி, ஒன்றிய செயலாளர் ஆர்.பக்கிரிசாமி, ஊராட்சி தலைவர்களான இறையான்குடி த.சேகர், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.