
காவிரி ஆற்றில் உடல் கிழிந்த நிலையில் அடித்து வரப்பட்ட ஒற்றை யானை தமிழகப் பகுதியான ஆலம்பாடியில் ஆற்றின் இடையில் உள்ள பாறையின் மீது சிக்கி நின்றுள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
உபரி நீர் வரத்தின் அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மரக்கட்டைகள், கால்நடைகள், முதலைகள் உள்ளிட்டவை ஆற்றில் அடித்து வரப்பட்டன. தற்போது இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக வனப் பகுதியில் வசித்த யானை ஒன்று இறந்துள்ளது. இதனை அறிந்த கர்நாடக மாநில வனத்துறையினர் வனப்பகுதியில் இறந்த ஒற்றை யானையினை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்காமல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் விட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பினால் கர்நாடக மாநில காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அம் மாநில வனத்துறையினரால் விட்டுச் சென்ற இறந்த ஒற்றை யானையானது நீரில் அடித்து வரப்பட்டு தமிழகப் பகுதியான ஆலம்பாடியில் ஆற்றின் நடுவே உள்ள பாறையின் மீது மோதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒற்றை யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் வனப்பகுதியில் புதைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ள நிலையில், ஆற்றில் உடல் கிழிந்த நிலையில், இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் கிருமிகளால் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காவிரி நீரை பருகும் போது நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ொல்ல
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.