
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் திகழ்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.
தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழகம் மற்ற மாநிலங்களைவிட முன்னிலையில் இருக்கிறது. தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயிக்கிறது.
நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கும். திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம்.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களின் மூலம் நம் மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான நாட்டில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று (ஆக. 12) வெளியிட்டது.
சிறந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளில் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
மாநில பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் என 3 புதிய பிரிவுகளில் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒட்டுமொத்த பிரிவில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
பொறியியல் துறையிலும் ஐஐடி சென்னை முதலிடம் பெற்றுள்ளது அதுபோல, 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் வேலூர் சிஎம்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழகத்தில் மட்டும் 18 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.