
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை விசாரிக்கை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், எதிர் தரப்பு சாட்சியாக இருவரையும் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு, கடந்த 2017 ஏப்ரல் மாதம் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.
இதனிடையே, அப்போதைய முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோரை விசாரிக்க சிபிசிஐடிக்கு கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லாததால் அவரை எதிர் தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதி அளித்து கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
மேலும், காணாமல் போன பொருள்கள் குறித்து சசிகலா, இளவரசி ஆகியோருக்கு தெரியும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதால், சசிகலா உள்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.