சென்னை: கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி துணை வினா எழுப்பி பேசுகையில், ‘மழைக்காலங்களில் உபரி நீா் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், வறட்சி காலங்களில் நீா் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். எனவே, காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி என அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டி, உபரி நீா் வீணாவதைத் தடுக்க வேண்டும்‘என்று கோரிக்கை விடுத்தாா்.
அமைச்சா் பதில்:
இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பதிலளிக்கையில், மாநிலம் முழுவதும் நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், எந்தெந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தடுப்பணை தேவைப்படுகிறது என்பதை பேரவை உறுப்பினா்கள் எழுதிக் கொடுக்கலாம். வரும் நிதியாண்டில் எத்தனை திட்டங்களை நிறைவேற்ற எடுக்க முடியுமோ அவற்றை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










