துபையிலிருந்து சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 1.7 கிலோ தங்கம்: விமான ஊழியர் உள்பட இருவர் கைது!

துபையிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல்
Published on
Updated on
1 min read

சென்னை: துபையிலிருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் கடத்தி வந்த பயணி மற்றும் விமான நிறுவனத்தின் ஊழியர் ஆகிய இரண்டு பேரை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

துபையிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாகவும், அந்த தங்கத்தை விமான ஊழியர் ஒருவரே எடுத்து வருவதாகவும், சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து, கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், நேற்று ஞாயிறு அதிகாலை முதல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஞாயிறு அதிகாலை, 4.40 மணிக்கு, துபையிலிருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் இறங்கி வந்த பயணிகளை சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் இறங்கி வெளியில் வந்து விட்டனர்.

இதை அடுத்து சுங்கத்துறையினர் விமானத்தில் பணியாற்றிய விமான ஊழியர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களில் 26 வயது ஆண் ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனி அறையில் முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது அந்த ஊழியர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 1.7 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி என்பது தெரிய வந்துள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஒரு விமானப் பயணிதான் அவரிடம் தங்கக் கட்டிகளைக் கொடுத்ததாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த, அந்த கடத்தல் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com