'தேர்தல் விதிகளில் திருத்தம் மிகப்பெரும் அச்சுறுத்தல்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – ஹரியாணா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. மத்திய பாஜக அரசின் பயம் ஹரியாணா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது. 

தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில், மனுதாரருக்கு தேவையான ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்பின்னர் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும், சிசிடிவி காட்சி, வேட்பாளர்களின் வீடியோ காட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொது ஆய்வுக்கு வழங்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com