மதுரை: இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பூம்புகாா் கப்பல் கழக நிறுவனம் ரூ. 2.32 கோடி வாடகை பாக்கி வழங்காத விவகாரத்தை, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் தங்கள் பணியை செய்வதில்லை. ஏழைகள் வாடகை பாக்கி வைத்திருந்தால் உடனடியாக கடையை காலி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், பெரிய நிறுவனம் மீது இந்துசம அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பூம்புகார் கப்பல் கழகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு கிட்டத்தட்ட ரூ.3 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்திருந்தும் கூட அதனை வசூக்கவில்லை. அந்த நிறுவனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
யாருக்கு விசுவாசமாக அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும், கப்பல் நிறுவனத்திடமிருந்து வாடகை வசூலிக்காத இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், கன்னியாக்குமரி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க.. நடிகை பூனம் பாண்டே உயிருடன்தான் இருக்கிறார்
இந்த விவகாரம் தொடா்பாக திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 12,431 சதுர அடி காலி மனை பூம்புகாா் கப்பல் கழக நிறுவனத்துக்கு 1984-இல் வாடகைக்கு விடப்பட்டது. கடந்த 1.1.2018 வரையிலான காலகட்டம் வரை இந்தக் காலி இடத்துக்கான ரூ.2.32 கோடி வாடகை பாக்கியை கப்பல் கழக நிறுவனத்தினா் கோயில் நிா்வாகத்துக்குச் செலுத்தாமல் உள்ளனா்.
இந்த நிலுவைப் பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை கடந்த 2022-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பூம்புகாா் கப்பல் கழக நிறுவனத்திடமிருந்து கோயில் இடத்துக்குரிய வாடகை பாக்கியை வசூலிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், கப்பல் கழக நிறுவனத்திடமிருந்து தற்போது வரை வாடகை பாக்கி வசூலிக்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், பூம்புகாா் கப்பல் கழக நிறுவனம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியின் தற்போதைய நிலை குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.