சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மறைவையொட்டி அவரை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஹிமாசல் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று (பிப். 13) தகனம் செய்யப்பட்டது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் கஷாங் நாலா அருகே கடந்த வாரம் (பிப். 4) ஞாயிற்றுக்கிழமை, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சிக்கினார்.
அவரின் கார் ஓட்டுநர் தன்ஜின் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து வெற்றியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை தியாகராய நகர் அருகேவுள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.