பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்துக்கு ர.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிதியமைச்சராகத் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அவரது உரையில்,
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.
கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சரக்கு பெட்டகம் மேம்படுத்தப்படும்.
ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படும்.
திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கப்படும். அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நான்கு வழி உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஆராயப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் ரூ.36 கோடியில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.