சென்னை, கோவை, மதுரையில் "தோழி விடுதிகள்" கட்டப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் தாம்பரம், திருச்சி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் 1,145 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
சென்னை, திருவண்ணாமாலை, ஓசூர் ஆகிய நகரங்களில் 432 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும் என்றார்.