சென்னை: கோவையில் கலைஞா் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்றும், திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசனுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.அவரும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன், கோவையில் கலைஞா் நூலகம் அமைக்கப்படுவது தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வைத்த கேள்விகளுக்கு நிதியமைச்சா் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக கூறினாா். ஆனால், பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை.
கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அவருக்கு நான் சொல்லும் பதில், அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும் என்பதாகும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞா் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டதோ, சென்னையில் கலைஞா் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதோ, இன்னும் சில தினங்களில் கலைஞா் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் கோவை நூலகமும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும்.
ஆனால், வானதி சீனிவாசனுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவிக்கிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டதைப் போல அல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு நிகழ்ச்சிக்கு உங்களுக்கும் முறையாக அழைப்பு வரும். விழாவில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.