மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறிவரும் நிலையில், அதுதொடர்பாக இன்று சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டுவில் கர்நாடகத்தால் அணை கட்டுவோம் என்று பேசலாமே தவிர செயல்படுத்த முடியாது.
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகத்தால் எடுத்துவைக்க முடியாது. அதற்கு திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் கூறினார்.
இதனிடையே, மேக்கேதாட்டு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டப் பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது,
காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுக் காலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் சூழல் உருவாகும் என்று அவர் கூறினார்.