போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில், ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 7ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இது தொடா்பான முத்தரப்புப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஜன.9-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்ட அறிவிப்பால் வரும் 9-ஆம் தேதிமுதல் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோா் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவாா்கள். அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என்று அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.