போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதையடுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டன.
இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கண்ணன், “போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் நாளையும் தொடரும். தமிழ்நாடு அரசு தங்களை உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் அமைச்சர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு விரோதமானது, எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். அதிமுக ஆட்சியில் வழங்காத கோரிக்கைகளை இப்போது அதே அதிமுகவுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'குஜராத்தில் எல்லாமே போலி': பட்டியலிட்ட மல்லிகார்ஜுன கார்கே!