ஜல்லிக்கட்டுகளில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் குறிப்பிடப்படாது. காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுகளில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி


மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பணிகள் 95 சதவீதம் வீதம் முடிவடைந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் குறிப்பிடப்படாது. காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை(ஜன.15) நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியானது அவனியாபுரத்திலும், இரண்டாவது போட்டி பாலமேட்டிலும், மூன்றாவது போட்டி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அவனியாபுரத்தில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. ஏற்பாடுகளில் உள்ள சின்ன சின்ன தவறுகளை உடனடியாக சரி செய்ய கூறியுள்ளோம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வழக்கத்தைவிட என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள்? 
குறைந்தபட்சம் ஆயிரம் காளைகளையாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம். 

வாடிவாசல் பின்னால் கூடுதலாக கதவு வைக்கப்பட்டுள்ளது. அதனால் காளைகள் அதிகம் இறக்கப்படுமா? 
600 முதல் 700 காளைகளை வாடிவாசல் பின்னால் கதவிலிருந்து இழுக்கும்போது காளைகள் பின்னால் சென்று தள்ளுவாடி ஆகிவிடும்.எனவே,இந்த ஆண்டு காளைகள் தள்ளுவாரியாகாமல் இருப்பதற்காக இந்த ஆண்டு புதியதாக வாடிவாசல் பின் கதவு பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் முன்னது பெருநாள் மாடு வாடி வாசலுக்குள்ளே சுற்றும், தற்போது குறுகளாக வாடிவாசல் அமைத்துள்ளதால் மாடு நேரடியாக வாடிவாசல் விட்டு வெளியே வந்துவிடுவது போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வில்லை(டோக்கன்) தருவதில் தாமதம் ஏற்படுவதால் காளைகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகிறார்களே?
மொத்தத்தில் ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும், 3400 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காளைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் தற்போது அலுவலகம் சென்ற உடனே எவ்வளவு காளைகள், எவ்வளவு மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதை அறிவித்து விடுவார்கள்.

மாடு பிடி வீரர்களுக்கு டோக்கன்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது? 
அவனியாபுரத்தில் தகுதியான மாடுபிடி வீரர்கள் 650 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு நாளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படுகிறார்கள்.

வெற்றி பெற்ற வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கான பரிசு பொருள்களை அவர்களின் கையில் கொடுக்காமல் தூக்கிப்போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது? 
நாங்களும் வந்து பரிசுகளை வாங்கிக் கொள்ளும்படி காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களிடம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் மேடைக்கு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகிறது. அதனால் காளைகள் அவிழ்ப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த ஆண்டு நீங்கள் சொன்னது போல் பரிசுகளை அவர்கள் கையில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் ஜனவரி 23-ஆம் தேதி போட்டிகள் நடப்பது குறித்து அறிவிக்கப்படும்.

உயர்நீதிமன்ற உத்தரவிட்டதன் பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சாதி பெயர் குறிப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த ஆண்டு காளைகளின் பெயர், ஊரை மட்டுமே குறிப்பிடுவார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளின் டோக்கன் ஸ்பான்சர்களுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதா? 
அந்த மாதிரி எதுவும் கிடையாது, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்கு டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றவர், பல்வேறு மாவட்டங்களுக்கு டோக்கன் வழங்கப்பட வேண்டுமா?  வேண்டாமா?  என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசியல் தலைவர்கள் என்ற பாகுபாடுகள் எதுவும் கிடையாது. மொத்தம் 1000 காளைகள் தான் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவிழ்க்கபடும். இதில் எந்த பாரபட்சமும் கிடையாது என்று மூர்த்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com