சென்னை: சவால்கள் இல்லாத சூழலிலிருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று காலை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் முதல் நாளில் ‘மாணவர்கள் எதற்கு தயாராக வேண்டும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னெசன்ட் திவ்யா மற்றும் லிங்க்யுஇன் முதுநிலை இயக்குநர் ருச்சி ஆனந்த் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
கருத்தரங்கில் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
“கல்வி நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க காலதாமதம் ஆகலாம். புத்தகங்கள் தேவை, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதனால்தான், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆய்வு அடிப்படையிலான படிப்புகள் தமிழகத்தில் ஊக்கவிக்கப்படுகிறது. இதன்மூலம் படைப்பாற்றல், குழுவாக பணிபுரியும் திறன் போன்றவை தானாகவே மாணவர்களிடம் மேம்படுகிறது.
தமிழ்நாட்டில் 417 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்தை முடிக்கின்றனர். நான் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கடந்தாண்டு 13 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
குடிமைப் பணி தேர்வுகள், புதிய மற்றும் சவாலான சூழல்களை கையாளக்கூடியவர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. அதனால், மாணவர்கள் உடனடியாக தயாராக தொடங்க வேண்டும்.
பல்வேறு கல்வி வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு மாற்றுக் கல்விகள் உள்ளன. சவால்கள் இல்லாத சூழலிலிருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும். சூழலுக்கேற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.