திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா காலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாழிமலை மற்றும் திருத்தணி, பழமுதிர்சோலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவான தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7.30 சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது.
இதையும் படிக்க | வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் முருகன் கோயில்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை முருகன் கோயில்களில் செலுத்தி வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பக்தர்கள் திருக்கோயில் கடலில் புனித நீராடியும், அங்க பிரதட்சணம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.
பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.