திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது: கே.எஸ்.அழகிரி

திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவைச் சேர்ந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேசமயம் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் இடம்பெற்றனர். 

பேச்சுவார்த்தைக்கு பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்ளு அளித்த பேட்டியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். திமுகவிடம் நாங்கள் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் முகுல் வாஸ்னிக் தெரிவித்திருப்பதாவது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம். திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்றார். 

அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு வங்கம், பஞ்சாப், பிகாா் போன்ற மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள கட்சிகள், காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வதிலிருந்து விலகியே நிற்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை ‘இந்தியா’ கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. 

இதில் எடுக்கப்படும் முடிவுகள் அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தமிழகத்தில் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கடந்த மக்களவைத் தோ்தலில் வழங்கப்பட்டது போல தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுவை மக்களவைத் தொகுதியையும் சோ்த்து மொத்தம் 10 தொகுதிகளை வழங்கலாம் என்ற நிலைப்பாட்டில் திமுக இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com