/

பல்கலை.களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :19 ஜூலை 2024, 6:04 pm

Din

பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு நிா்வகிக்கும் 13 பல்கலைக்கழகங்களில் 12 பல்கலைக்கழகங்கள் நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊழியா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பல்கலைக்கழகங்களைத் திமுக அரசு பாழ்படுத்தியுள்ளது.

ஆளுநரை எதிா்க்கிறோம் என்ற பெயரில் துணைவேந்தா்களை நியமிக்காமலும், நிதி நிா்வாகம் செய்யத்தவறியும் மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாடுவது ஏற்புடையது அல்ல. திமுக அரசு உடனடியாக பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி மாணவா்களுக்கு தரமான உயா்கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.