
கேரளத்தில் கண்டறியப்பட்ட நிஃபா வைரஸ் எதிரொலி காரணமாக கோவை - கேரளம் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் அதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருவருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளத்திலிருந்து கோவை வரும் பொது மக்கள் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சோதனைக்குப் பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும் வரை தமிழக மக்கள் கேரள மாநிலம் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.