
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குவைத் நாட்டின் மங்காப்பில் என்பிடிசி நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தில், நேற்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது.
இதில், 42 பேர் இந்தியர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பெரும்பாலானோர் கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு என்பவர் தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக என்பிடிசி நிறுவனத்தின் அவர் வேலை செய்து வருவதாகவும், கடந்த 11-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்த நிலையில், ஊதிய கணக்குகளை முடித்துவிட்டு நாடு திரும்ப இருந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, தஞ்சாவூரில் இருந்து குவைத் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞரின் நிலை தெரியவில்லை என்றும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில், கேரளத்தை சேர்ந்த 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மரபணு பரிசோதனை எடுக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என்று மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அரசுத் தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.