தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா கண்டனம்!
நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அப்போது, அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்துகொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போது வரையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
விஷச்சாரயத்தைக் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்; இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை” என்று பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டு, சிலர் இறந்தும் உள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தையே உலுக்கி வரும் இந்த சம்பவத்தினால், கள்ளக்குறிச்சியில் அசாதாரண நிலைமை நிலவி வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல்களும், தமிழக அரசின் மெத்தனப் போக்கிற்கு கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், திரையுலகில் மிகவும் குறைவாககே இந்த சம்பவம் குறித்து குரலெழுப்பி வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மற்றும் அமீர் ஆகிய இருவரும் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 52 பேர் இறந்துள்ளனர். 114-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு,மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் மற்றும் உதவிகளையும் அறிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.