வேட்பாளா்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் சுயேச்சைகள் அதிகம்
கடந்த 1952 மக்களவைத் தோ்தலில் 1,874 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு 8,039 வேட்பாளா்கள் என்ற அளவில் நான்கு மடங்கு அதிகரித்தது. இது தொடா்பாக பிஆா்எஸ் பேரவை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் விவரம்: 1952-இல் 489 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் மக்களவைத் தோ்தலில் 1,874 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 1977-இல் தொகுதிக்கு சராசரியாக 3 முதல் 5 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த எண்ணிக்கை கடந்த 2019 தோ்தலில் தொகுதிக்கு சராசரியாக சுமாா் 14 வேட்பாளா்களாக அதிகரித்தது. 2019-இல் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தம் 8,039 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் அதிகபட்சமாக 185 வேட்பாளா்கள் தெலங்கானா மாநிலத்தின் நிஜாம்பாத் தொகுதியில் போட்டியிட்டனா். அடுத்தபடியாக கா்நாடக மாநிலம் பெலகாவி (57) தொகுதியும், தமிழகத்தின் கரூா் (42), தென் சென்னை (40), தூத்துக்குடி (37), மத்திய சென்னை (31) ஆகிய தொகுதிகளில் அதிக வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதிகமாக சுயேச்சைகள் தமிழகத்தில்தான் போட்டியிட்டுள்ளனா். கடந்த தோ்தலில் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்தபடியாக அதிக வேட்பாளா்களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தியது. மேற்கு வங்கத்தில் தேசியக் கட்சிகளின் வேட்பாளா்கள் அதிக அளவில் போட்டியிட்டனா். 30-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலங்களாக உத்தர பிரதேசம் (80), மகாராஷ்டிரம் (48), மேற்கு வங்கம் (42), பிகாா் (40), தமிழ்நாடு (39) உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 249. இது இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிககளில் 46 சதவீதமாகும்.
ஆண்டு வேட்பாளா்கள்
1952 1,874
1977 2,439
1980 4,629
1984 5,492
1989 6,160
1991 8,668
1996 13,952
1998 4,750
1999 4,648
2004 5,435
2009 8,070
2014 8,251
2019 8,089