

சென்னை: நாட்டின் போதைப்பொருள் தலைநகரமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது என பாஜக தமிழ்மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டின் போதைப்பொருள் தலைநகராக தமிழ்நாடு மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாநிலத்தை மாற்றியதற்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், போக்குவரத்து புலனாய்வு இயக்குநரகத்தால் பிடிப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கின் பரவலான வலைப்பின்னல் அம்பலாகிக் கொண்டிருக்கும் வேளையில், இது குறித்து வாயே திறக்காமல் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிமேலாவது விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்னைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.