சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், கூட்டணிக் கட்சியின் தலைவர்களும் பங்கேற்றனர்.
நந்தனம் பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் பேசும்போது, “தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. போதைப் பொருள் புழக்கத்தால் தமிழக மக்கள் கவலையில் உள்ளனர். குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மோடி தரும் வாக்குறுதி.
நாட்டின் நலனுக்காக நான் குடும்பத்தை விட்டு வெளியேறி பணியாற்றி வருகிறேன். மக்களின் நம்பிக்கையை குடும்ப அரசியல் செய்வோர் கொச்சைப்படுத்தி வருகின்றனர்” எனப் பேசினார்.