உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி கூறி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளனர்.
குஷ்பு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், காந்திய மக்கள் கட்சியின் தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேடையில் வரவேற்புரையாற்றிய எல்.முருகன், காசி தமிழ் சங்கத்தை நடத்திய நாயகர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். தமிழக குடும்பத்துக்காக ஏராளமான திட்டங்களைக் கொடுத்த மோடியை கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு வரவேற்கிறேன். பாரதிய ஜனதாவின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ. 11 லட்சம் கோடி கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் எங்குச்சென்றாலும் தமிழின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.