அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச். 4) சென்னை வந்தார். மகராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார்.
பின்னர், கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் சென்னை வருகையினால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டும், பாஜக பொதுக்கூட்டத்தை முன்னிட்டும் முக்கிய பகுதிகளில் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.