புதுச்சேரி 9 வயது சிறுமி கொலை வழக்கில் மேலும் 8 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி மாயமான நிலையில், அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் 5-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாரின் விசாரணையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, கழிவுநீா் கால்வாயில் வீசியது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் அவரது வீட்டில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை மாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புதுவை டிஜிபி ஸ்ரீநிவாஸ், விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் உள்ளிட்டோா் சிறுமியின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, வைத்திக்குப்பம் பாப்பம்மாள் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி 9 வயது சிறுமி கொலை வழக்கில் மேலும் 8 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமி கொலை வழக்கில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் இதுவரை 21 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 13 பேர் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.