சென்னை பம்மல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அருண் என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
அனாகபுத்தூரைச் சேர்ந்த தந்தை சங்கர், மகன் அருண் குமார் இருவரும் இட்லி பார்சல் வாங்க உணவகத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மேலாளர் அருணிடம் கூடுதல் சாம்பார் பார்சல் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேலாளர் அருண் கூடுதல் சாம்பர் பார்சல் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அருண் குமார் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், சம்பவ இடத்திலேயே மேலாளர் அருண் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து உணவகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயெ மேலாளர் அருண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தனியார் உணவக நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கர் மற்றும் அருண் குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தனியார் உணவக மேலாளர் அருணுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.