ராமதாஸை சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்: இறுதி முடிவு எட்டப்படுமா?

ராமதாஸை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்திக்கவிருப்பதால் இறுதி முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக - பாமக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாஸை, அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசவிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாள்களாக இழுபறியில் நீடிக்கும் நிலையில் இன்று இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பாமகவும் அதிமுகவும் தற்போது பாஜகவை புறக்கணித்துவிட்ட கைகோர்க்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில்தான் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அதிமுக நிர்வாகிகள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிமுக நிர்வாகிகள், ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

எனவே, அதிமுக- பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளநிலையில், பாமக, தேமுதிக என சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com