விழுப்புரம்: விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத் தடுப்புச் சுவரில் திங்கள்கிழமை அதிகாலை கண்டெய்னர் லாரி மோதி விபத்து நிகழ்ந்தது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரி செல்லும் சாலையை நோக்கியும், திருச்சி - சென்னை சாலைகளையும் நோக்கியும் மேம்பாலம் கட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து புதுச்சேரி நோக்கி அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி திங்கள்கிழமை அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து பாலத்தின் அந்தரத்தில் லாரி தொங்கியது.
இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய மீட்புக் குழுவினர், போலீஸார் நிகழ்விடம் விரைந்து விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போலீஸார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.