பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்த கருத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அமைச்சர் ஷோபா பேசியிருந்த கருத்து சமூகவலைதளத்தில் கண்டனத்திற்குள்ளானது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைந்து குண்டு வைப்பதாகவும், தங்கள் மாநிலத்தின் மீதுதாக்குதல் நடத்துவதாகவும் தேர்தல் பிராசத்தின்போது, செய்தியாளர் சந்திப்பில் ஷோபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஷோபாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவின் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னட மக்களும் ஏற்கமாட்டார்கள்.
அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்பு பேச்சு தொடர்பாக ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.