சென்னை: வரும் கோடைக் காலத்தை மதுப்பிரியர்கள் கொண்டாடும் வகையில், விலை மலிவான 12 புதிய சரக்குகளை டாஸ்மாக் அறிமுகப்படுத்துகிறது.
அறிமுகப்படுத்தும் புதிய சரக்குகளுக்கு சிறப்பான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு புதிய சரக்குக்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் செயல்படும் மதுபான ஆலையில் இருந்து தயாரித்து விற்பனைக்கு வந்திருக்கும் சாதாரண வகை மதுபானமாக இந்த வீரன் இடம்பெற்றுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர வகை மதுப்பிரியர்களுக்கு உகந்ததாக உள்ளதாம்.
விரைவில், இதுபோன்ற புதிய மதுபான வகைகள் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, 4 பியர் வகைகளுடன் புதிதாக 12 மதுபான வகைகள் விற்பனைக்குக் கொண்டு வர டாஸ்மாக் வாரியம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், மக்களவைத் தேர்தல் முடிந்ததும், இவை டாஸ்மாக் அலமாரிகளை அலங்கரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, வீரன் மதுபானம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்ட பிறகு, மாலிவுவிலை மதுபானங்களின் விற்பனைதான் அதிகரித்து மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மதுபான விலைகளை டாஸ்மாக் இரண்டு முறை உயர்த்தியிருந்தது.
தற்போது டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்களும், 49 வகை நடுத்தர மதுபானங்களும், 128 வகையான பிரீமியம் வகை மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்மல், 35 பியர் மற்றும் 13 வைன் வகைகள் விற்பனையில் உள்ளன.
நடுத்தர மதுபானங்களை வாங்கி வந்த பல மதுப்பிரியர்கள், தற்போது சாதாரண வகை மதுபானங்களை வாங்கத் தொடங்கிவிட்டதையே விற்பனை விவரம் காட்டுகிறது. எனவே மலிவு விலை மதுபானங்கள் அறிமுகமானால், மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும்.