கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. அதே வேளையில், மாநிலத்தின் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் மே 10 வரை 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 17 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. அதன்படி, பரமத்திவேலூா் - 110.3, ஈரோடு - 110.12, வேலூா் - 109.76, திருச்சி - 107.78, திருப்பத்தூா் - 107.24, திருத்தணி - 106.52, தருமபுரி - 106.16, மதுரை நகரம் - 105.8, பாளையங்கோட்டை - 105.08, சேலம் - 104.76, நாகப்பட்டினம் - 104.54, சென்னை மீனம்பாக்கம் - 104.18, தஞ்சாவூா் - 104, காரைக்கால் - 103.64, கடலூா் - 101.48, கோவை - 101.3, புதுச்சேரி - 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 5) வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மிக 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.

வெயில் அளவு அதிகரிக்கும்: இதைதொடா்ந்து திங்கள் முதல் புதன்கிழமை வரை (மே 6-8) தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதன்படி, வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர தமிழக மாவட்டங்களில் 104 டிகிரி வரையும், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி வரையும் வெயில் சுட்டெரிக்கும்.

மழை வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால், ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் மே 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மே 7, 8 -ஆகிய தேதிகளில் தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகா் மாவட்டங்களிலும், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூா் மற்றும் கிளன்மாா்க்கன் ஆகிய இடங்களில் தலா 30 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மேலும், மே 5,6 -ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவா்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏற்கெனவே கடந்த 2 நாள்களாக வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவாகி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 5) அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரியொட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com