விராலிமலையில்  ஆடு வாங்க சந்தையில் குவிந்த வியாபாரிகள்.
விராலிமலையில் ஆடு வாங்க சந்தையில் குவிந்த வியாபாரிகள்.

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சித்திரை மாதத்தில் தான் பெரும்பாலான கோயில் திருவிழாக்கள், காதுகுத்து உள்ளிட்ட சில சுப விழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். அதோடு சித்திரை மாதத்தில் காதுகுத்து, சடங்கு உள்ளிட்ட சில சுபவைபவங்களும் நடைபெறும். இதனால், பொதுவாக சித்திரை மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தையில் களை கட்டும் அதோடு ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும்.

அந்த வகையில், இன்று காலை விராலிமலையில் கூடிய ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் அதிகாலையிலேயே விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வெளியூர்களில் இருந்து பல்வேறு வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் சந்தையில் குவிந்தனர். இதனால் கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது.

இன்று கூடிய சந்தையில் 5 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 8 ஆயிரத்திற்கும், எட்டு கிலோ எடை கொண்ட ஆடு 11 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரத்துக்கும் விலை போனதால் கால்நடை வளர்ப்பு மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்த போதும் கோயில்களில் நேர்த்திக்கடனுக்கு வெள்ளாடுகள் மட்டுமே பலியிடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சென்றதால் வர்த்தகம் சுமார் ஒன்றரை கோடியை தாண்டியது.

ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இது போன்ற விழா காலங்களில் தான் தாங்கள் உழைப்புக்கு தகுந்த லாபம் ஈட்ட முடிவதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com