
மதுரை: சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் கருவி செயல்படாததால், ஒரு வாகன ஓட்டியிடமிருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தக் குற்றத்துக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகத்துக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
தொடர்ந்து, பணம் வசூலித்த வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கன் கல்லூரி துணைத் தலைவர் மார்ட்டின் டேவிட், பணி நிமித்தமாக 2020ஆம் ஆண்டு சிவகாசி சென்றபோது, கப்பலூர் சுங்கச் சாவடியில், இவரது பாஸ்டேக் கணக்கிலிருந்து கணினி மூலம் பணம் பெறமுடியாமல் போனதாகவும், சுங்கச் சாவடி ஊழியர்கள், அவரிடமிருந்து கட்டணத்தை பணமாக செலுத்தும்படி தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். தனது பாஸ்டேக் கணக்கில் போதிய பணமிருந்தும், தன்னை சுங்கச் சாவடி ஊழியர்கள் மோசமாக நடத்தியதாகவும், பணத்தைக் கொடுக்கும்படி வலியுறுத்தியதாகவும், அதற்காக காத்திருக்க வைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகாசியிலிருந்து மதுரை திரும்பியபோதும் இதே சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து உடனடியாக அவர் ஃபாஸ்டேக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
இந்த விசாரணையின்போது, அந்த சுங்கச் சாவடியை தனியார் நிறுவனம்தான் கவனித்து வருவதாகவும், அதில், ஃபாஸ்டேக் கணக்கு வைத்திருந்த எஸ்பிஐ சர்வர் பிரச்னைதான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. சுங்கச் சாவடி ஊழியர்கள் பிரச்னை செய்திருக்க மாட்டார்கள் என்றும் வாதிட்டது. ஆனால், எஸ்பிஐ வங்கித் தரப்பிலிருந்து தங்களது பக்கத்தில் பிரச்னை இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைக் கழகத்தின் ஸ்கேனரில்தான் பிரச்னை என்றும் அறிக்கை அளித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் தீர்ப்பாயம், மனுதாரரின் ஃபாஸ்டேக் கணக்கில் போதிய பணமிருந்தும், அதனை கணினியால் ஸ்கேன் செய்ய முடியாமல் போன நிலையில், வாடிக்கையாளர் எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநருக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்குதான் அளிக்க வேண்டும். இலவசமாக செல்லவே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், வாகன ஓட்டுநர், கட்டணமின்றி பயணிக்கவே அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அவரிடம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் தவறாக நடத்தப்பட்டுள்ளார். இதனால், மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுங்கச் சாவடியில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் பொறுப்பு என்றும் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அபராதமாக ரூ.25,000 அளிக்கவும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ.10 ஆயிரம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.