/

நெல்லை அருகே இளைஞர் கொலையைக் கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டம்

திருநெல்வேலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மேலச்செவலில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
இளைஞர் கொலையைக் கண்டித்து, மேலச்செவலில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
Updated On :17 நவம்பர் 2024, 12:08 pm

DIN

திருநெல்வேலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மேலச்செவலில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் பசும்பொன்நகர் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி மகன் மணிகண்டன் (32). இவருக்கு பிரேமா என்ற, ஒரு குழந்தை உள்ளது. பெயின்டர் வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவில் மணிகண்டன் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டையிலிருந்து வந்தாராம். மேலப்பாளையம் கருங்குளத்தில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த மணிகண்டனை, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்றனர்.

அங்கிருந்து தப்பிக்க முயன்ற மணிகண்டனை அக்கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸார் அங்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலச்செவல், கீழச்செவல், கருங்குளம், முன்னீர்பள்ளம் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் பெண்கள் உள்பட 200 பேர் கீழச்செவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஊர்வலமாக மேலச்செவலுக்கு வந்தனர்.

மேலச்செவல் பிரதானச் சாலை சந்திப்புப் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மணிகண்டனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். மணிகண்டன் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு டிஎஸ்பிக்கள் சதீஷ்குமார் (அம்பை), சத்தியராஜ் (சேரன்மகாதேவி) ஆகியோர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட், அதிகாரிகள் வருகை தந்தனர். அங்கு வந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் அங்கு வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.