
புயல் மற்றும் கனமழை எதிரொலியாக மக்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்ட் மேம்பாலத்தின் மீதும் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வந்தனர்.
அதற்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வட சென்னை பகுதி மக்களும் தங்களது கார்களை மின்ட் மேம்பாலத்தின் மீது நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வழியாகச் செல்வோர், இந்தக் காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று சிந்தித்துக்கொண்டே செல்கிறார்கள்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கணித்ததைவிடவும் 2 நாள் தாமதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது.
ஃபெங்ஜால் புயல் கரையை நெருங்க நெருங்க மழையும் காற்றும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.