
'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
படப்பிடிப்பில் இருக்கும்போதே, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக்கொண்டுள்ளார் ரஜினி. பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?
மருத்துவமனை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'ரஜினிகாந்த், செப்.30 ஆம் தேதி க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்திலிருந்து வெளியேறும் தமனி எனப்படும் ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்தது. இதற்கு அறுவைசிகிச்சையின்றி, டிரான்ஸ்கேத்தடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதயவியல் துறை மூத்த மருத்துவர் சாய் சதீஷ், ரஜினிக்கு சிகிச்சையளித்து, தமனி ரத்த நாளத்தை முழுமையாக அடைத்திருந்த வீக்கத்தை சரி செய்து, அங்கு ஸ்டென்ட் பொருத்தியுள்ளார்.
ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை குறித்து அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக விளக்கம் கொடுத்துள்ளோம்.
திட்டமிட்டபடி ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது, குணமடைந்து வருகிறார், இன்னும் ஒரு சில நாள்களில் அவர் வீடு திரும்புவார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ந'மது' அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!
ரஜினியும் குணமடைய வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவர் குணமடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் ரஜினி இன்று(வியாழக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அவர் நாளை(வெள்ளிக்கிழமை)தான் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170-வது படமாகும். 171-வது படமாக 'கூலி' உருவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.