தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் பூமிப் பூஜை!

தவெக மாநாடு - புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா...
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பந்தல்கால் நடுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதற்குள் பதிலளிக்குமாறு தெரிவித்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் பதில் அளித்திருந்தது. ஆனால், மாநில மாநாடு நடைபெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் செப். 20) அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் செப்டம்பர் 21 - ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலர் பு ஸ்ஸி ஆனந்த். கூடுதல் எஸ்.பி. வி.வி.திருமாலிடம் மாநில மாநாட்டுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கடிதத்தை அளித்தார்.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி மாநில மாநாட்டுக்கு அனுமதி வழங்கி காவல்துறை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து வி. சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாநில மாநாட்டுக்கான பந்தல் கால் நடுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தல் கால் நடப்பட்டது.

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பந்தல்கால் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்ட கோயில்களில் இருந்து தீர்த்தங்களை கொண்டு வந்தனர்.

பந்தல்கால் நடுவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன் காரணமாக, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டதால் மாநாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டதால் கட்சியினர் பலரும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com