சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வருக்கு கூட்டணி தலைவா்கள் நன்றி
சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு சுமுக தீா்வு கண்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.
சந்திப்புக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சுமாா் 37 நாள்கள் அவா்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
இடையில், முதல்வரை திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சந்தித்து, தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்குப் பிறகு 4 அமைச்சா்களை அனுப்பி, பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காணப்பட்டது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்றாா் அவா்.