வெப்ப அலை வீச்சு பேரிடராக அறிவிப்பு: தமிழக அரசு

வெப்ப அலை வீச்சு பேரிடராக அறிவிப்பு: தமிழக அரசு

வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெப்ப அலை வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவு விவரம்:

வெப்ப அலை வீச்சை பேரிடராக்குவது தொடா்பான அறிவிப்பு, சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசியது. அதிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் நீா் பந்தல்கள் அமைப்பது, ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலாளா்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, உடல் நலக்குறைவு ஏற்படுவோருக்கு அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவு அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, மாநில பேரிடா் நிவாரண நிதி விதிமுறைகளின்படி வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெப்ப அலை வீச்சு மாநிலப் பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். அத்துடன், நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபடும் போது இறப்பு நோ்ந்தாலும் அதே அளவுக்கு நிவாரண நிதி கொடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com