/

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயருகிறதா?

சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

News image
ஆம்னி பேருந்துகள்
Updated On :2 செப்டம்பர் 2024, 2:32 pm

DIN

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சுங்கச் சாவடி கட்டணம் உயர்தப்பட்டாலும், ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்றும், ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெறவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

நிகழாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தோ்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.