
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகின்றது.
சென்னை கோயம்பேடு, திருமங்கலம், அம்பத்தூர் மற்றும் திருவள்ளூரில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது.
இந்த நிலையில், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.