பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறாரா நயினார் நாகேந்திரன்?

தமிழக பாஜக தலைவர் தேர்வு பற்றி...
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிமுதல் விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருப்ப மனுவை சமர்ப்பிக்க மாலை 4 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாஜக தலைவர் போட்டியில் தான் இல்லை என்று ஏற்கெனவே தற்போதைய தலைவர் அண்ணாமலை அறிவித்துவிட்டார். பிரதமா் நரேந்திர மோடியின் ராமேசுவர நிகழ்வில் நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், அவர் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், நேற்றிரவு சென்னைக்கு வருகைதந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே பாஜக அலுவலகத்துக்கு வருகைதந்துள்ள நயினார் நாகேந்திரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் புதிய தலைவர் போட்டியில் இருப்பதாக கூறப்படும் வானதி சீனிவாசனும் பாஜக அலுவலகத்துக்கு வருகைதந்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்வார் என்றும், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சித் தலைவராக நாளை அவர் பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு பேனரிலும் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com