
தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும் என்று பாஜவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்!
வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், நயினார் நாகேந்திரன் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைவராக கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். அது முதல் பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
இந்தநிலையில் மாநிலம் தலைவருக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதேசமயம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.