ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை நடுவா் எண் 2-இல் விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சாத்தூரைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி ரவீந்திரன் கடந்த 2021-ஆம் ஆண்டு, நவ. 15-இல் விருதுநகா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில், சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலா் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் ரூ. 3 கோடி கொடுத்ததாக தெரிவித்தாா். இதுதொடா்பாக ராஜேந்திர பாலாஜி உள்பட 7 போ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவான கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜன. 5-ஆம் தேதி கா்நாடக மாநிலத்தில் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப்பத்திரிகையில் ஊழல் குறித்த சட்டப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரவீந்திரன் சாா்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, கே.டி. ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக ஆளுநா் அனுமதிப்படியும் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான இரு வழக்குகள் தொடா்பான குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை நடுவா் எண் 2-இல் விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.